Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பில்லூர்-3 திட்டத்தின் குடிநீர் விநியோகத்தை கமிஷனர் ஆய்வு

கோவை, ஆக.3: கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3, சிறுவாணி, ஆழியார் மற்றும் பவானி ஆகிய 6 குடிநீர் திட்டங்கள் மூலமாக சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றின் சமயபுரம் அருகில் அமைந்துள்ள தடுப்பணையின் மேற்பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து இயல்பு நீரேற்று குழாய்கள் மூலமாக நீர் உந்தப்பட்டு கட்டன் மலை அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு குகை வழியாக கட்டன் மலையை கடந்து பன்னிமடை பகுதியில் அமையப் பெற்றுள்ள நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது, பின்னர் அங்கிருந்து ராமகிருஷ்ணாபுரம் புதிய மற்றும் பழைய நீர்த்தேக்க தொட்டிகள், பாரதி பார்க், வளர்மதி நகர், பிரஸ் என்க்ளேவ் மற்றும் பிள்ளையார்புரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு சீரான இடைவெளியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 1க்குட்பட்ட வளர்மதி நகர் பகுதியில் அமைந்துள்ள முதன்மை நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 42 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் செயல்பாடுகள் குறித்து இன்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.