Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுதானியம் சமைத்து தர மறுத்த மனைவி அடித்து கொலை: காவல் நிலையத்தில் கணவன் சரண்

அண்ணாநகர் ஆக.1: சிறுதானியம் சமைத்து தர மறுத்ததால், மனைவியை அடித்து கொன்ற கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்தார். கோயம்பேடு ஜெயின் நகர் 3வது தெருவில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் பணிபுரிந்து வந்தவர் அருள்மணி (45). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (48). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக உள்ளார். தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த மகன் பொறியியல் படித்து வருகிறார். 2வது மகன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அருள்மணி தனது குடும்பத்துடன், மகளிர் விடுதியில் உள்ள ஒரு அறையில் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணனுக்கு மது பழக்கம் உள்ளதால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன், மனைவியிடம் சாப்பிட என்ன உள்ளது, என்று கேட்டுள்ளார்.

அதற்கு அருள்மணி, சாப்பாடு மட்டும்தான் உள்ளது, என்று கூறியதால் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், ‘தினமும் இரவில் சாப்பாடுதானா... டிபன் செய்ய மாட்டியா..’ என்று கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ‘சிறுதானிய உணவாவது செய்து கொடு,’ என்று ராதாகிருஷ்ணன் கேட்டபோது, இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது, ஏற்கனவே உள்ள சாப்பாட்டை என்ன செய்வது என்று கேட்டதால் அவர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், நான் சொல்வதை கேட்க மாட்டாயா, என்று கேட்டபடி கன்னத்தில் சரமாரியாக அடித்ததில் அருள்மணி மயக்கம் போட்டு விழுந்து அசைவற்று கிடந்துள்ளார். இதை பார்த்த ராதாகிருஷ்ணன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மனைவியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அருள்மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அருள்மணி உடலை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே ராதாகிருஷ்ணன் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது, ராதாகிருஷ்ணன் கூறியதாவது: எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். மனைவி, மகன்களுடன் கடந்த 15 வருடங்களாக விடுதியில் வசிக்கிறேன். அவ்வப்போது எனக்கும் மனைவிக்கும் சிறு, சிறு சண்டைகள் வரும். சம்பவத்தன்று இரவு சிறுதானிய உணவு சமைத்து தரும்படி கேட்டபோது ஏற்கனவே சாப்பாடு உள்ளதால் சிறுதானிய சாப்பாடு செய்ய முடியாது என்று மனைவி கூறினார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் கன்னத்தில் அடித்தபோது மயங்கி விழுந்து இறந்துவிட்டார், என கூறியுள்ளார். இதையடுத்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.