Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்: வாரியம் ஏற்பாடு

சென்னை, மே 20: குடிநீர் வாரியம் சார்பில் சென்னையில் 50 இடங்களில் 24 மணி நேர சுகாதாரமான குடிநீர் வழங்கும் ஏடிஎம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர மக்கள் மற்றும் அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சென்னை குடிநீர் வாரியம் மொத்தமாக குடிநீர் விநியோகம் செய்கிறது. குறிப்பாக, 15 பகுதி அலுவலகங்கள் மற்றும் 200 டிப்போ அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்பரப்பு தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை எடுக்கப்படுகின்றன. பூண்டி - சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் மேற்பரப்பு ஆதாரங்கள். செங்குன்றம் ஏரியிலிருந்து, ஏரிக்கு அருகில் புழல், சூரப்பேட்டை மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை நகருக்கு வழங்குவதற்காக 2007ம் ஆண்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது. அக்டோபர் 2004 முதல் சென்னை நகரின் தெற்கே சுமார் 230 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீராணம் ஏரி சென்னை மாநகர குடிநீர் வழங்கலுக்கு மற்றொரு ஆதாரமாக விளங்குகிறது. இந்த நீர் வடகுத்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. போரூர் குடிநீர் விநியோக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னை நகருக்கு வினியோகிக்கப்படுகிறது. சூரப்பேட்டை குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் 2009ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தவிர, 2010ம் ஆண்டு முதல் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையிலிருந்து சுமார் 100 எம்எல்டி தண்ணீரையும், 2013ம் ஆண்டு முதல் நெம்மேலியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையிலிருந்து 100 எம்எல்டி தண்ணீரையும் எடுக்கிறது.

பூண்டி, தாமரைப்பாக்கம், வெள்ள சமவெளி, கன்னிகைப்பாறு, பஞ்செட்டி, மீஞ்சூர், தெற்கு கடற்கரை நீர்நிலைகள், கடிலம் மற்றும் பரவனாறு ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள கிணறுகளும் நிலத்தடி நீர் ஆதாரங்களாக இருக்கின்றன. சென்னை மாநகரம் மற்றும் ஆவடி, அனகாபுத்தூர், கன்டோன்மென்ட், கவுல் பஜார், முனாவூர், பல்லாவரம், பொழிச்சலூர் போன்ற நகரமயமாக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குகிறது. உள் விநியோகம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மணலியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னையில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் மற்றும் பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் முதல்கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்து வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள் இருக்கும் பகுதிகள் என 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குடிநீர் ஏடிஎம்கள், பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் அமைக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக, பட்டினப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம், அண்ணா நகர் டவர் பூங்கா, பாண்டி பஜார் உள்ளிட்ட 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 150 மி.லி மற்றும் 1 லிட்டர் என்ற 2 வகைகளில் குடிநீர் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் எண்ணற்ற பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏடிஎம்களில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதா கதிர்கள் ஆகியவற்றை கொண்டு தேசிய தரத்திற்கு இணையான தூய்மையான நீரை வழங்குகின்றன.

மேலும், 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் இந்த அமைப்புகள், எப்போதும் குளிர்ச்சியான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீரை உறுதி செய்கின்றன. பாதுகாப்பு, ஆரோக்கியம், நீண்ட கால பயன்பாடு மற்றும் எளிதான நிறுவுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவில் சுத்தமான குடிநீர் விநியோகம் இதன் சிறப்பம்சமாகும். தொட்டியில் நீரின் அளவு குறையும்போது அல்லது மின்னழுத்தம் குறைவாக இருக்கும்போதும் எச்சரிக்கை காண்பிக்கப்படும்.

இருப்பு இல்லாத நிலையிலும் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதி இதில் உள்ளது. மேலும், கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் விவரங்களையும் பயனர்கள் பார்க்க முடியும். இந்த விநியோக அமைப்பு பேட்டரி மூலம் இயங்குவது கூடுதல் சிறப்பாகும். கட்டண வசூலில் துல்லியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், ரீசார்ஜ் மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் பயனர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இந்த குடிநீர் ஏடிஎம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.