ரூ.8.65 கோடியில் முடிவுற்ற பணிகள் திறப்பு கொளத்தூர் தொகுதியில் ரூ.13.95 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்
சென்னை, செப்.25: கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், ரூ.8.65 கோடியில் முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முரசொலி மாறன் பூங்கா மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்காவை ரூ.8.20 கோடியில் மறுசீரமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சீனிவாச நகர் 3வது பிரதான சாலையில் ரூ.1.40 கோடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டிடம் மற்றும் சமையல்கூடம், ஜி.கே.எம். காலனி பிரதான சாலையில் ரூ.28.20 லட்சம் பல்நோக்கு மையக் கட்டிடம், ஜி.கே.எம். காலனி 32வது தெருவில் ரூ.31 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டிடம், பல்லவன் சாலையில் அமைந்துள்ள தாங்கல் மயான பூமியில் ரூ.1.96 கோடியில் பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் கூடிய நீத்தார் மண்டபம், வார்டு 64 முதல் 78 வரையிலான பல்வேறு தெருக்களில் ரூ.10 கோடியில் 10,463 எல்இடி தெரு விளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் பொருத்தும் பணி என மொத்தம் ரூ.13.95 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க. நகர் மண்டலம், சோமையா தெருவில் புதிதாக 10 வகுப்பறைகளுடன், ரூ.3.59 கோடியில் தரை மற்றும் முதல் தளத்துடன், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சென்னை உயர்நிலைப் பள்ளிக் கட்டிடம் மற்றும் பெரம்பூர், ரங்கசாயி தெருவில் புதிதாக 10 வகுப்பறைகளுடன் தரை மற்றும் முதல் தளத்துடன், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.3.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம், திரு.வி.க. நகர் மண்டலம், ரங்கசாயி தெருவில் அமைந்துள்ள மேயர் முனுசாமி விளையாட்டு திடலில் ரூ.64.80 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், திறந்தவெளி இறகு பந்தாட்ட மைதானம், மின் விளக்குகள், பசுமை புல்வெளி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து மைதானம்,
திரு.வி.க. நகர் மண்டலம், அமிர்தம்மாள் காலனியில் ரூ.45 லட்சம் செலவில் இறகுப்பந்து மைதானம், சிறுவர் விளையாட்டு மைதானம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல் என மொத்தம் ரூ.8.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் விளையாட்டுத் திடலை முதல்வர் திறந்து வைத்தார். முன்னதாக, சோமையா தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர், சோமையா தெருவில் ரூ.4.19 கோடியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜவஹர் நகரில் அமைந்துள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் மற்றும் மடிக்கணினியை வழங்கினார்.
மேலும், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாவு அரவை இயந்திரங்கள், மூன்று சக்கர மோட்டார் வாகனம், தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகளுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து, பெரியார் நகர் விளையாட்டு மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் பயிற்சி முடித்த 126 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களையும், 356 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், கொளத்தூரிலுள்ள கலைஞர் நூற்றாண்டு கண் சிகிச்சை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 200 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளை முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் பிரகாஷ், ஆணையர் குமரகுருபரன், நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன், பெரியார் அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஹேமலதா, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.