Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், ஆவடியில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

அண்ணாநகர், அக்.24: நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் 4 பிரபல தனியார் பள்ளிகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில், மின்னஞ்சல் மூலம் மேற்கண்ட பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவல்படி, நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் 2 குழுவினர் தனித்தனியாக சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பெரும்பாலான பெற்றோர் நேற்று தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

* ஆவடி பரித்திப்பட்டு வேலம்மாள் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை வேலம்மாள் பள்ளி மற்றும் திருமழிசை சென்னை பப்ளிக் ஸ்கூல், ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், 3 பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அறிந்த காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் தங்கமணி தலைமையிலான குழுவினர் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தனித்தனிக் குழுவாக விரைந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.