பல்லாவரம், அக்.24: பல்லாவரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 3வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மேகலா தேவி. இவர், சமீபத்தில் திருநீர்மலை பகுதியில் இடம் ஒன்றை வாங்கி, அதனை தனது பெயருக்கு பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய மேகலா தேவி விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா என்பவரை, தொடர்பு கொண்டபோது, தனக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக தந்தால் மட்டுமே, தங்களது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தர முடியும்.
இல்லையென்றால் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாது என்று கூறியதாக தெரிகிறது. பணம் கொடுக்க விரும்பாத மேகலாதேவி, இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரம் நோட்டுகளை மேகலா தேவியிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர். அதனை திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவிடம் மேகலா தேவி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


