தாய்லாந்து சுற்றுலா சென்றபோது ஆழ்கடலில் வண்ண மீன்களை ரசிக்க சென்றவர் மூச்சுத்திணறி பலி: தனியார் நிறுவன துணை மேலாளரின் சோகம்
ஆலந்தூர், செப்.23: ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (43). இவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். திவாகரின் நிறுவனத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் நிறுவனத்தின் பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோரை தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். அதன்படி, கடந்த 15ம் தேதி இரவு திவாகர் தன்னுடைய நிறுவன ஊழியர்களுடன் தாய்லாந்துக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திவாகரின் வீட்டிற்கு அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற திவாகர் ஆழ்கடலில் வண்ண மீன்களை கடற்பாறையில் பார்க்க சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடனே கடற்பயிற்சியாளர் அவரை வெளியே கொண்டு வந்து முதலுதவி அளித்து சிகிச்சை கொடுத்ததாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல் அளித்தனர். தாய்லாந்தில் இருந்து திவாகரின் உடல் இன்று காலை சென்னைக்கு வரும் என்று கூறப்படுகிறது.