Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 கோடி கொக்கைன் பறிமுதல்; விமான நிலையத்தில் கென்யா இளைஞர் கைது

சென்னை, செப். 18: ஆப்பிரிக்க நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து எடுத்து வந்த கொக்கைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கென்யா நாட்டைச் சேர்ந்த கடத்தல் பயணியான இளைஞரை கைது செய்து விசாரிக்கின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர், அடிஸ் அபாபாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது.

விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட பயணிகள் விமானம் சென்னையில் வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி, வெளியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலா பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். உடனே அவரை சென்னை விமான நிலையத்தில் ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளை சோதித்த போது, சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சாக்லேட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, கொக்கைன் போதை பொருளை, சாக்லேட் போல் தயார் செய்து மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். கென்யா நாட்டு இளைஞரிடம் இருந்து 2 கிலோ கொக்கைன் போதை பொருளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், கென்யா நாட்டு இளைஞரை கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். பிறகு சென்னை தியாகராயர் நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, மேலும் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், ஆப்பிரிக்க நாட்டில் இருந்து ரூ.20 கோடி மதிப்புடைய 2 கிலோ கொக்கைன் போதை பொருள், கடத்திக் கொண்டு வந்த கென்யா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.