தண்டையார்பேட்டை: எண்ணூர் கேவிகே குப்பத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (41). இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பேரூரை சேர்ந்த சீனு (35) என்பவர், கடந்த ஒரு மாதமாக மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சீனு, பாஸ்கரய்யா (47), வெங்கடேசன் (50), கொன்னூர் சீனு (55), தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த செல்வம் (54), பிரசாந்த் (29) ஆகிய 7 பேர் சென்றுள்ளனர். பின்னர், மீன்கள் பிடித்துகொண்டு கடந்த 11ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்துள்ளனர். மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர்.
அப்போது, சீனு மாயமானதால் சக மீனவர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது, இன்ஜின் அறையில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீனுவின் வலது பக்க கழுத்து பகுதியில் கயிறு இறுக்கிய அடையாளம் இருந்துள்ளது. மேலும் இடது பக்க முதுகு, இடுப்பு, பகுதியில் சிராய்ப்பு இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை யாரேனும் அடித்து கொன்றனரா என விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.