மாதவரம், அக்.9: உலக வீடற்றோர் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி- அரசு காப்பகங்களில் உள்ள நலன்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சென்னை மாநகராட்சி, வடக்கு மண்டலம் சார்பில் உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதவரம் மண்டலம், ஆந்திரா பேருந்து நிலையத்தில் நடந்தது. மண்டல நல அலுவலர் தேவிகலா தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் பெரிய கருப்பன் முன்னிலை வகித்தார். இதில் ரியல் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் வீடற்றோர் நிலை குறித்தும், அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நடத்தி வரும் காப்பகங்களில் வழங்கப்படும் சேவைகள், மறுவாழ்வு பணிகள், மீண்டும் குடும்பத்தாரோடு இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள், சமூகத் திட்டங்களோடு இணைத்தல் போன்ற பணிகள் குறித்து வீதி நாடகம், பொம்மலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள், விழிப்புணர்வு நடனத்தின் மூலம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து பயணிகள், ஓட்டுநர் நடத்துநர்கள், பொதுமக்கள் ஆகியோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வீடற்றோரை வீதியில் விடமாட்டோம், காப்பகம் மூலம் மறுவாழ்வு தருவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில், வடக்கு மண்டல காப்பக ஒருங்கிணைப்பாளர் மெர்லின் மற்றும் அறக்கட்டளை இயக்குநர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.