நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி: 6 பேர் கைது
சென்னை, ஆக.9: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 200க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்து, போலி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 7ம் ேததி புகார் ஒன்று அளித்தார். அதில், அயனாவரத்தை சேர்ந்த பரணிதரன் (46), ரோகினி பிரியா (49) மற்றும் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த அப்துல் நாசர் (40) ஆகியோர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வாங்கி தருவதாக ரூ.3.50 லட்சம் பெற்றனர். பிறகு 3 பேரும் தனக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு முத்திரையுடன் ஆவணம் அளித்தனர்.
அதை கொண்டு சென்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காட்டிய போது, அது போலி ஆவணம் என தெரியவந்தது. அதுகுறித்து 3 பேரிடம் கேட்டபோது முறையாக பதில் இல்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பரணிதரன், அப்துல் நாசர், ரோகினி பிரியா ஆகியோர் தனது கூட்டாளிகளான ரேவதி, கஜேந்திரன், அவரது மனைவி சாமுண்டீஸ்வரி ஆகியோர் இணைந்து முத்துலட்சுமி போல் 200க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி வரை பெற்று அவர்களுக்கு தமிழக அரசு வழங்கியது போல் போலி ஆவணங்கள் வழங்கி மோசடி ெசய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட பரணிதரன், ரோகினி பிரியா, அப்துல் நாசர், ரேவதி ஆகியோரை கடந்த 6ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அபம்தூரை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் கஜேந்திரன் மனைவி சாமுண்டீஸ்வரி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.