Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, அக்.7: சென்னையில் கடைகள், வாகனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் மூலம் பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், பாதசாரிகள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சாலைகளில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்கிறது. பல சாலையோர கடைகள் நடைபாதையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வணிகம் செய்வதால், பாதசாரிகள் நடக்க இடமின்றி தவிக்கின்றனர். வாகன ஓட்டிகள் தன்னிச்சையாக நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவது மற்றொரு முக்கியப் பிரச்னையாக உள்ளது.

சில இடங்களில் கட்டுமான பொருட்கள் நடைபாதையில் அடுக்கி வைக்கப்பட்டு பாதசாரிகளின் நடமாட்டத்தை தடை செய்கின்றன. ஆக்கிரமிப்புகளால் சேதமடைந்துள்ள நடைபாதைகள், பாதசாரிகள் நடக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. இதன் விளைவாக ஆக்கிரமிப்புகள் காரணமாக, அவசரக்கால வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவை செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர், இருப்பினும் அவை முழுமையான தீர்வை அளிக்கவில்லை.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மண்டலம் 1 முதல் 15 வரையிலான நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நிலையான இயக்க நடைமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்த நடைமுறைகள், பாதசாரிகளின் நடமாட்டத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 சாலையில் வியாபாரத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து, நடைபாதைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு இடங்களையும், சம்பந்தப்பட்ட பிரிவின் உதவி பொறியாளர்கள் கணக்கெடுக்க வேண்டும்.

 இந்த கணக்கெடுப்பு மண்டல வாரியாக தயாரிக்கப்பட்டு, உதவிச் செயற்பொறியாளர்கள் மூலம் மண்டல அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இது ஆக்கிரமிப்புகளின் தீவிரத்தை மதிப்பிட உதவும்.

 கணக்கெடுப்பு பணி முற்றிலும் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ செயலி (ஆப்) மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அகற்றப்பட வேண்டிய கட்டமைப்புகள் சரியாக வகைப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, நடைபாதை மீது பொருட்களை விற்கும் தற்காலிக வியாபாரிகள் (புத்தகங்கள், பொம்மைகள், செருப்புகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை).

தள்ளுவண்டிகளை பயன்படுத்தும் தற்காலிக வியாபாரிகள் (பூக்கள், காய்கறிகள், ஜூஸ் போன்றவை).

 நிரந்தர கடைகளுக்கு முன் பரவி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் (மளிகைப் பொருட்கள், தளவாட சாமான்கள், பாத்திரங்கள் போன்றவை). வேறு ஏதேனும் கட்டமைப்புகள்.

இந்த வகைப்படுத்தல், அகற்றல் பணியை திறம்பட நடத்த உதவும்.

 பகல் ஷிப்ட்டில் பணிபுரியும் அமலாக்கக் குழு, ஆக்கிரமிப்பு இடங்களின் இருப்பிட விவரங்களுடன் கூடிய புகைப்படங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அடையாளம் காணப்பட்ட மறுநாளே அகற்றும் பணி தொடங்கப்பட வேண்டும். இது தாமதங்களை தவிர்க்க உதவும்.

 ஆக்கிரமிப்பாளர்களுக்கு அகற்றல் தொடர்பாக, உதவிச் செயற்பொறியாளர்கள் ஒரு நாள் முன்னதாக அறிவிப்புகள் அல்லது நோட்டீஸ்கள் வழங்க வேண்டும். இது சட்டரீதியான செயல்முறையை உறுதி செய்யும்.

 பாதுகாப்பு தேவைப்பட்டால், உதவிச் செயற்பொறியாளர்கள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது பணியின் சீரான நடைமுறையை உறுதிப்படுத்தும்.

 குறைந்த மக்கள் தொகை கொண்ட மண்டலங்கள் (1 முதல் 3 வரை) ஒரு யூனிட் லாரி ஒதுக்கப்பட வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட மண்டலங்கள் (4 முதல் 15 வரை) ஒவ்வொரு யூனிட்டிற்கும் ஒரு யூனிட் வாகனம், ஒரு டிப்பர், ஒரு போப் கேட் ஒதுக்கப்பட வேண்டும்.

 ஒவ்வொரு லாரிக்கும் 4 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

 ஆக்கிரமிப்பு அகற்றல் பணிக்காக, உதவிச் செயற்பொறியாளர்கள் பின்வரும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களான ஹெல்மெட், ஒளிரும் ஜாக்கெட், கை உறை வழங்க வேண்டும்.

 மடிக்கக்கூடிய அலுமினிய ஏணி, சுத்தியல், கடப்பாரை, கட்டிங் பிளேடு, மெட்டல் வயர் கட்டர் மற்றும் பிற கருவிகள் வைத்திருக்க வேண்டும். இவை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு, அதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செயலியில் பதிவேற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் பொருட்கள் கே.டி.ஜி/ பிடிஜி மையங்களில் கொட்டப்பட்டு, ரசீது பதிவு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க, அமலாக்கக் குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அது மிகவும் தீவிரமாகக் கருதப்படும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் மூலம், சென்னையின் நடைபாதைகள் மீண்டும் பாதசாரிகளுக்கானது என்பதை உறுதி செய்யப்படும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் இப்போது குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், ‘இந்த நடைமுறைகள் நகரின் அழகையும் செயல்பாட்டையும் மீட்டெடுக்க உதவும்,’ என்றார். இந்த பணிகள் தொடங்கப்பட்டவுடன், மண்டல அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது.