ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.1.27 கோடி உரியவரிடம் ஒப்படைப்பு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
சென்னை, அக்.7: சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட ரூ.1.27 கோடியை, 121 புகார்தாரர்களிடம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். சென்னையில் வங்கி அதிகாரி, மின்வாரிய அதிகாரி எனக்கூறி ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை பறிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த புகார்களில் 46 புகார் மனுக்கள் பெற்று 38 மனக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.56,12,247 மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை பெருநகர வடக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 42 புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.27,24,239, மேற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 34 புகார்களில் 9 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.21,13,235, தெற்கு மண்டலத்தில் பெற்றப்பட்ட 55 புகார்களில் 21 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.12,66,079, கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 50 புகார் மனுக்களில் 11 மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.10,32,274 மீட்கப்பட்டது.
மொத்தம் சென்னை பெருநகர காவல் எல்லையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக 205 புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில், 121 புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து பொதுமக்களிடம் இருந்து பறித்த ஒரு கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 074 ரூபாய் பணம் மீட்கப்பட்டு உரிய சட்ட விதிகளின் படி, 121 புகார்தாரர்களிடம் சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
அந்த வகையில் கடந்த 9 மாதத்தில் சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் க்ரைம் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரூ.21.69 கோடி பணம் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.