சென்னை, நவ.6: சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகிறது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லரை கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்குமாறு மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின் போது நடத்துநர்களுக்கு வழங்கப்படும் முன் பணத்தை பயணிகளுக்கு, பயணச்சீட்டு வழங்கும் போது முறையாக பயன்படுத்த வேண்டும். அதேபோல், பயணிகளிடம் சில்லரை தொடர்பான விவாதங்கள் தவிர்த்து, கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக புகார்கள் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement
