சென்னை, டிச.5: தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை சேவைகளை மேலும் வலுப்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் நிலையான சேவைகளை வழங்கும் வகையில், மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மைத்துறை மண்டலம் 4 மற்றும் 8ல் தூய்மை பணி மேற்கொள்ள உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டது. இதற்கு கடந்த 28ம் தேதி 4 ஒப்பங்கள் பெறப்பட்டன. மண்டலம் 4 மற்றும் 8ல் மக்கள் நெரிசல் மிகுந்தவை, குறுகிய தெருக்கள், பெரிய வணிக வளாகங்கள், உயர் அடுக்குமாடி குடியிருப்புகள், மயானங்கள், பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் அதிகம் கொண்ட பகுதி என்பதால், இங்கு வழங்கப்படும் தூய்மை சேவைகள் மிக உயர்ந்த தரத்தில் அமைய வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதனால் முன்னதாக தயாரிக்கப்பட்ட டெண்டர் ஆவணம் தற்போது நிலவும் சேவை தேவைகளுக்கு முறையாக பொருந்தாமல் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் கோரிக்கைகளுக்கு இணங்க கல்லறை பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, விளையாட்டு மைதான பராமரிப்பு போன்ற முக்கிய சேவைகளையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவை நகர மக்களின் தினசரி வசதிகளுடன் நேரடியாக தொடர்புடைய அத்தியாவசிய சேவைகளாகும். இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை சேவைகளின் தரத்தை மேம் உயர்த்தும். இந்த செயல்பாட்டு மாற்றங்களை ஒருங்கிணைத்து பார்க்கும் போது, தற்போதைய டெண்டரை ரத்து செய்து, மேம்படுத்தப்பட்ட பணிக்குறிகள், திருத்தப்பட்ட நிதி மதிப்பீடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட சேவை கூறுகளுடன் புதிய டெண்டரை வெளியிடுவது மிக அவசியமாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை சேவைகளை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் நிலையான சேவைகளை வழங்குவதற்காக மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

