சென்னை, நவ.1: மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட அரிய வகை மலேசிய பாலி மைனாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் பயணிகள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த என்ற ரஹமத் (34) உள்பட 3 பேர், ஒரு குழுவாக சுற்றுலா பயணி விசாவில் மலேசியா சென்று விட்டு, இந்த விமானத்தில் வந்தனர். அவர்கள் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் உடைமைகளை பரிசோதித்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கூடைகளுக்குள் மலேசிய நாட்டின் அபூர்வ வகை பறவையான \\”பாலி மைனா\\” என்ற வெள்ளை நிற 10 பறவைகள் உயிருடன் கூண்டுகளுக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பறவைகள் நீண்ட நேரம் பயணம் செய்து வந்ததால் களைப்புடன் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்த பறவைகளை வெளியில் எடுத்து, மயக்கத்தை போக்கி, காப்பாற்றினர்கள்.
அதோடு அபூர்வ வகை பறவைகளை கடத்தி வந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது பாலி மைனாக்களை சென்னைக்கு கொண்டு வந்து, இன விருத்தி செய்ய வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததாகவும், பறவைகள் ஆர்வலர்கள், மற்றும் பங்களாக்களில் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்பவர்கள் இந்த பறவைகளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவார்கள் என்றும் தெரிவித்தனர். ஆனால், இந்த பறவைகளை மலேசிய நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முறையான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. பறவைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் இல்லை. இந்நிலையில் பாலி மைனாக்களை இந்தியாவுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய் கிருமிகள் நமது நாட்டில் பரவி பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கும், மனித இனங்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 10 பாலி மைனாக்களையும் எந்த விமானத்தில் வந்ததோ, அந்த விமானத்திலேயே வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் சுங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் மலேசியாவில் இருந்து பறவைகளை சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வந்த 3 பயணிகளிடம் வசூலிக்கவும் முடிவு செய்தனர். அதன்படி மலேசியாவுக்கு நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட தனியார் பயணிகள் விமானத்தில் 10 பாலி மைனாக்களையும் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அரிய வகை மலேசிய பறவைகளை முறையான ஆவணங்கள், மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல் கடத்திக் கொண்டு வந்த ரஹமத் உள்பட 3 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சுங்க சட்டம் பிரிவின் கீழ் கைது செய்து விசாரித்தனர். இந்த அரிய வகை பறவைகள் யாருக்காக கடத்திக் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
