Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் 21வது பேட்ச் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், இணை பேராசிரியர் மற்றும் கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவருமான முனைவர் டி.வேல்முருகன், சென்னை வைஷ்ணவா கல்லூரி நிர்வாகி துவாரகா தாஸ்கோவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். வித்யாசாகர் கல்விக் குழுமத் தாளாளர் விகாஸ்சுரானா சிறப்பு விருந்தினரை வரவேற்று கவுரவித்தார். பொருளாளர் சுரேஷ் கன்காரியா, எம்பவர்மெண்ட் முதல்வர் முனைவர் மாரிசாமி ஆகியோர் பங்கேற்றனர். வித்யாசாகர் மாணவிகள் கல்லூரியின் சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பு குழுக்களால் ஏற்படும் நல்ல வாய்ப்புகள், அதனால் மாணவிகள் பெறும் நன்மைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இதில், சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதமாக உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், என்றனர். இதனை தொடர்ந்து பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள், பிளஸ்2 வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டு துறையில் மாநில, மாவட்ட, தேசிய, சர்வதேச அளவில் சாதித்த 84 மாணவிகளுக்கும் மற்றும் நவம்பர் 2024ம் ஆண்டு நடந்த பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 87 மாணவிகளுக்கும் கல்விக் கட்டணச் சலுகை ரூ.20 லட்சம் நிர்வாக குழுமத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் இரா.அருணாதேவி நன்றி கூறினார்.

=====================