Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆவடி மாநகராட்சிக்கு தேர்வாய்கண்டிகையில் இருந்து புதிய கூட்டு குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு தேர்வாய்கண்டிகையில் இருந்து புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சியில் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் ரூ.98.59 கோடியில் நடைபெற்று வருகிறது. இதேபோல் ரூ.59.92 கோடியில் குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் ஜவர்கலால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டன. அவற்றை அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

பணிகளை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஏற்கனவே ரூ.113.84 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது குடிநீர் விரிவாக்க பணிகள் ரூ.59.92 கோடியில் நடைபெற்று 137.79 கிமீ தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.197.20 கோடியில் பணிகள் நிறைவடைந்து 102 கிமீ தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதேபோல் புதிதாக கட்டப்பட்டு வரும் 8 மேல்நிலைத் தொட்டியில் 3 தொட்டிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5 தொட்டிகள் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஆவடி மாநகராட்சியில் முழுவதுமாக குடிநீர் திட்டம் கொண்டு வர தேர்வாய் கண்டிகையில் இருந்து ஆவடி மாநகராட்சிக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டவரைவு அனுப்பப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் பாதியளவு கூட நிரம்பவில்லை. மக்களுக்கு குடிநீர் வழங்க இன்னும் மழை தேவை. எனவே மழையால் ஏற்படும் அசவுரியங்களை மக்கள் 2 நாட்களுக்கு பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் மேயர் ஜி.உதயகுமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் சு.சிவராசு, கலெக்டர் பிரபுசங்கர், ஆணையர் கந்தசாமி, துணை மேயர் சூரியகுமார், சன் பிரகாஷ், ராஜேந்திரன், அம்மு பொன் விஜயன், ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், அமுதா பேபிசேகர், பொன் விஜயன், நாராயண பிரசாத், பேபி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.