தா.பழூர், ஆக.22: விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்திச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முத்துவாஞ்சேரியிலிருந்து குணமங்கலம் நோக்கி வந்த டிராக்டர் ஒன்றை சோதனை நடத்துவதற்காக மறித்தனர்.
ஆனால் டிராக்டர் டிரைவர் சாலையின் ஓரமாக டிராக்டரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை போலீசார் சோதனை செய்தபோது அதில் முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து டிராக்டரை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை விக்கிரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.