அரியலூரில் தீபாவளியை முன்னிட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5,6ம் தேதி வீடுதேடி ரேஷன் பொருட்கள்
அரியலூர், அக்.4: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்டோபர் 5, 6ம் தேதிகளில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அரியலூர் கலெ க்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:அரியலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில், 477 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 19,466 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாகனங்களில் குடிமைப்பொருட்களை எடுத்துச்சென்று, ரேஷன்கடை ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில் குடிமை ப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.