பால்குடம் எடுத்து செல்லும் பக்தர்கள் ஜெயங்கொண்டத்தில் 144 நில ஆர்ஜித வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் உடனடி தீர்வு
ஜெயங்கொண்டம், ஜூலை 25: ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 144 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.
அந்த அரசாணை அடிப்படையில் உரிய நில உரிமையாளர்களிடம் நில பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிக்குழு மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வட்ட சட்ட பணிக்குழு தலைவர் நீதிபதி ராஜாமகேஸ்வரன் உத்தரவின் பேரில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி ராஜசேகர் வழக்கினை விசாரித்தார். இதில் 144 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. சம்மந்தப்பட்ட நில உரிமையாளருக்கு நில பட்டா மாற்றி கொடுக்க மக்கள் நீதிமன்றம் ஆணையிட்டது.
இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடி பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்த பகுதியில் நில உரிமையாளரிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதிமன்றம் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும், ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் நிலமெடுப்பு ஆனந்தவேல் கூறினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மோகன்ராஜ் மற்றும் செந்தில்குமார் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.