திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு மாநாடு திருவாரூரில் மாநாட்டு குழுத் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை எம்.பி செல்வராஜ், விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, கட்சியின் மாவட்ட செயலாளர் (பொ) கேசவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர ஆசாத், முருகானந்தம், நாகராஜன் உட்பட பல கலந்து கொண்டனர்.
இதில் கட்சியின் நகர செயலாளராக செல்வம், துணை செயலாளராக ராஜா, பாலதண்டாயுதம் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் திருவாரூர் நகரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக துவங்கிட வேண்டும், கோயில், மடம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே பட்டா வழங்கிட வேண்டும்,
சாலையோர வியாபாரிகள் அவர்கள் செய்து வரும் இடத்தில் நிரந்தரமாக தொழில் செய்திட அனுமதி வழங்கிட வேண்டும், திருவாரூர் வழியாக தற்போது சென்று வரும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் சென்று வர வேண்டும் என்பதுடன் வழிதடங்கள் மாற்றும் நடவடிக்கைகளை தென்னக ரயில்வே கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.