Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிராக்டர் கவிழ்ந்து அடியில் சிக்கிய சிறுவன் பலி ஒடுகத்தூர் அருகே சோகம் மலை கிராமத்தில் உழவு பணியின்போது

ஒடுகத்தூர், ஜூலை25: ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் உழவு பணியின் போது டிராக்டர் கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கிய சிறுவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஜார்தான் கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சிவா(15). இவர் 6ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சாமிநாதன் தனது விவசாய நிலத்தில் நேற்று உழவு பணிக்காக டிராக்டர் வரவழைத்து நிலத்தை உழுது கொண்டிருந்தார். இந்த டிராக்டரை மணி(30) என்பவர் ஓட்டினார். மேலும், இந்த டிராக்டரில் சிவா அமர்ந்து கொண்டு மணியுடன் சேர்ந்து உழவு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

உடனே உஷாரான மணி டிராக்டரில் இருந்து குதித்து தப்பினார். ஆனால் இந்த விபத்தில் சிறுவன் சிவா டிராக்டரின் அடியில் சிக்கிக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள் டிராக்டரை தூக்கி சிறுவனை மீட்டுள்ளனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிறுவன் சிவா சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக சாமிநாதன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் உழவு பணியின் போது டிராக்டர் கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.