Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்படும் 1800 புதிய குடியிருப்பு பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூலை 9: கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்படும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும், என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 216 சதுர அடி பரப்பளவில் மக்கள் வாழ்வது சிரமம் என்று கருதி, நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைந்தது 400 சதுர அடி பரப்பளவில் குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தற்போது கட்டப்பட்டு வரும் அனைத்து குடியிருப்புகளும் 400 சதுர அடி பரப்பளவிற்கு குறையாமல் கட்டப்பட்டு வருகின்றன. மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு இருந்த 1476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றது. வருகின்ற டிசம்பர் 2025க்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இங்கு இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வரின் உத்தரவுக்கிணங்க வாரியத்தின் மூலம் கடந்த 30 - 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தை கண்டறிய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் படி சென்னையில் மட்டும் 30492 குடியிருப்புகளும், மற்ற மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட வீடுகளும் சிதிலமடைந்து இருப்பது தெரிந்தது. இதனை இடித்து விட்டு மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 43 திட்டப்பகுதிகளில் ரூ.3088 கோடி மதிப்பீட்டில் 18275 குடியிருப்புகள் கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

34 திட்டப்பகுதிகளில் ரூ.3123 கோடி மதிப்பீட்டில் 15,294 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் கண்டயறியப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.