ஈரோடு, ஜூலை 23: சிவகிரி அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்ஐ மேனகா, பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
வேனில், 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த தற்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டிஆர் நகர் பகுதியில் வசிக்கும் சேகர் மகன் குப்புசாமி (30) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி, அதை மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கும் வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து குப்புசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1,800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.