மதுரை: மதுரை அருகே தனக்கன்குளம், கார்த்திகா நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். அரசு ஒப்பந்ததாரர். ஒப்பந்த பணிகளுக்கு தேவையான நிதியை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நகரச் செயலாளரும், தற்போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான சக்திவேல் என்பவரிடம் இருந்து பெற்று வந்துள்ளார். கந்துவட்டிக்கும் பணம் பெற்றதாக தெரிகிறது. மேலும், சக்திவேல் மூலம் கிடைத்த ஒப்பந்த வேலைகளை சப்-கான்ட்ராக்ட் மூலம் செய்துள்ளார்.
இவர் மூலம் கிடைத்த பணிகளை பழனிக்குமார் செய்து முடித்த பிறகு, சக்திவேலும், அவரது மருமகனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான கருப்பசாமி, ராஜலட்சுமி, சதீஷ், மற்றும் சங்கர் ஆகியோர் கணக்கு பார்த்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதி குறிப்பிட்ட பணத்தை பழனிக்குமாரிடம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், 2017 முதல் கடந்த அதிமுக ஆட்சிக்காலம் வரை பழனிக்குமார் செய்து கொடுத்த பணிகளுக்கு ரூ.21.64 கோடி பணத்தை இருவரும் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்டபோது சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், பழனிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பழனிக்குமார் பணிகள் மேற்கொண்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, தான் செய்த டெண்டர் பணிகளுக்கு போலி பில் தயாரித்து அவற்றின் மூலம் சக்திவேல் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து பழனிக்குமார், மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சக்திவேல், கருப்பசாமி, ராஜலட்சுமி, சதீஷ் மற்றும் சங்கர் ஆகியோர் மீது மோசடி மற்றும் கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.