மழைக்கு ஒதுங்கிய மது பாட்டில்கள் கவுண்டம்பாளையத்தில் தாய், மகனை கத்தியால் தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
பெ.நா.பாளையம், அக்.25: கோவை கவுண்டம்பாளையம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவர் மகன் கவுதம் (22). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. இவர் நேற்று முன்தினம் இவரது சகோதரி மகனுடன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், கவுதமிடம் மது குடிக்க 500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே நாங்கள் இருவரும் ரவுடிகள் என்றும் பணம் தராவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது பாக்கெட்டில் இருந்து பணத்தை பறிக்க முயன்றபோது கௌதம் அவர்களை கீழே தள்ளி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பேரில் ஒருவன் கத்தியை எடுத்து கவுதமின் கால், தலையில் தாக்கி அவரது பாக்கெட்டில் இருந்து 300 ரூபாயை பறித்துள்ளான். சத்தம் கேட்டு வெளியே வந்த கௌதமின் தாய் தடுக்க முயன்ற போது அவரது தலையில் தாக்கி விட்டு, மிரட்டி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கவுதம் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி கவுண்டம்பாளையம் அசோக் நகர் கீழ் பகுதியை சேர்ந்த ராம்தாஸ் மகன் கிரண் (எ) கிரண் ராய் (25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
