Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 தொகுதிகளில் இன்று முதல் வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணி: ஆணையர் குமரகுருபரன் தகவல்

சென்னை: சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆணையர் குமரகுருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட 16 தொகுதிகளில் இன்று முதல் வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படும், என ஆணையர் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 2025ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் குமரகுருபரன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 1.1.2025யை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வரும் 6.1.2025ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்க்கும் பணி வருகின்ற 20.8.2024 முதல் 18.10.2024 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு, Voter Helpline, 1950 செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் பிரித்தல், இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 20ம் தேதி (இன்று) முதல் வீடு, வீடாகச் சென்று குடும்பத்தில் உள்ள வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆணையாளர் குமரகுருபரன் கேட்டுக் கொண்டுள்ளார்.