Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி முடிந்து 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை, டிச.6: சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அனைத்து வாக்காளர்களுக்கும் இதற்கான படிவங்கள் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கி அதனை மீளப்பெற்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும், வாக்குச்சாவடி முகவர்களாலும் படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து மீளப் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி, மீளப் பெறப்பட்ட படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அப்பகுதிகளில் வசிக்காதவர்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் இறந்தோர்களின் பெயர்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலானது வாக்குச்சாவடி வாரியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் பட்டியலை, சென்னை மாவட்டத்தில் உள்ள 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களிடம் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பெயர்ப் பட்டியலை வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில் சரிபார்த்து விரைவில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் அதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் இந்தப் பட்டியலினை வாக்குச்சாவடி நிலை அலுவலரால் மீண்டும் களஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு வரும் 16ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதுகுறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் கூட்டம் நடத்தப்பட்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும், அவர்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களிடமும் இந்தக் கணக்கெடுப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அப்பகுதிகளில் வசிக்காதவர்கள், இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்தோர்களின் பெயர்ப் பட்டியலை சரிபார்த்து அதனை விரைவில் வழங்கிட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் வரும் 11ம் தேதிக்குள் முடித்து கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அதனடிப்படையில் வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.