புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்திய ரிசர்வ் வங்கிகளின் தரவுகளின்படி, ‘‘கடந்த 2015-2016ம் ஆண்டில் இருந்து 2024-2025ம் நிதியாண்டு வரை ரூ.12,08,828கோடி மொத்த கடன் தொகையை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கடந்த ஒன்பது ஆண்டுகளில் கடன் தள்ளுபடி மூலமாக ஒன்றிய அரசு தனது பில்லியனர் நண்பர்களுக்கு ரூ.12லட்சம் கோடி மதிப்புள்ள இலவசங்களை விநியோகித்துள்ளது. நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. ஆனால் மோடி அரசு பொதுத்துறை வங்கிகளில் இருந்து லட்சக்கணக்கான கோடிகளை அதன் நண்பர்களுக்காக வீணடிக்கிறது. பணக்காரர்களுக்கு பயனளிப்பதற்காக ஏழைகளை கொள்ளையடிப்பது தான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய மந்திரமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


