விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்குள் இருந்து சிதைந்த நிலையில் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Suresh
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
சென்னை: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார் . இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். வெப்ப அலை வீசுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பட்டாசு விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் குணமடைய பிரார்த்திப்பதாக முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செனகல்: போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின் செனகலில் இன்று ஓடுபாதையில் இருந்து போயிங் 737 விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. முதற்கட்ட தகவல்களின்படி விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் செனகலில் உள்ள பிளேஸ் டியாக்னே சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து திடீரென சறுக்கி விழுந்தது. விமானம் புறப்படும் போது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக விமானத்தின் இடது இறக்கை மற்றும் என்ஜினில் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானி உட்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக மேற்கு ஆப்பிரிக்க விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகமானது சுமார் 18.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தேசத் தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் சிலைகள் நிறுவப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் சிலை, பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காந்தி மண்டபம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், தியாகிகள் மணிமண்டபம், இராஜாஜி நினைவிடம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம். மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபம், அண்ணல் காந்தியடிகள் சிலை, தியாகி சங்கரலிங்கனார் சிலை, செண்பகராமன் சிலை, ஆர்யா (எ) பாஷ்யம் சிலை மற்றும் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காந்தி மண்டப வளாகத்தினை பார்வையிட்டு மணிமண்டபங்களும், தேசத் தலைவர்களின் திருவுருவ சிலைகளும் அமையப் பெற்றுள்ள இந்த வளாகத்தினை மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் இவ்வளாகத்தினை பலமுறை பார்வையிட்டு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்துப் பணிகளை பொதுப்பணித் துறையின் மூலமாக மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 2022-ஆம் நிதியாண்டில் 1 கோடியே 48 இலட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மண்டபங்களைப் புதுப்பித்தல், நடைபாதைகளை மேம்படுத்துதல், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
2022 – 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரால் இவ்வளாகத்தில் ரூ.18.00 இலட்சம் செலவில், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலையும், ரூ.34.00 இலட்சம் செலவில் மருது சகோதரர்கள் சிலையும், ரூ.43.43 இலட்சம் செலவில் வ.உ.சிதம்பரனார் சிலை மற்றும் செக்கு மண்டபம் சீரமைத்தல், ரூ.17.50 இலட்சம் செலவில் சுப்புராயன் சிலை, ரூ.148.12 இலட்சம் செலவிலும், 2 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் அயோத்திதாச பண்டிதர் புதிய மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும், காமராஜர் நினைவிட கட்டடத்தின் முகப்பு சீரமைத்தல், வர்ணம் பூசுதல் மற்றும் இதர சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
காந்தி மண்டப வளாகத்தினை சீரமைக்கும் வகையில், பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்களால் 8.5.2024 அன்று கள ஆய்வு செய்யப்பட்டு, பின்வரும் மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணித் துறையின் மூலம் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை தவிர, பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த வளாகத்திற்கு கூடுதலாக குடிநீர் வசதி, சிறப்பு மராமத்துப் பணிகளான சேதமடைந்த நடைபாதை சீரமைத்தல், பூங்காக்களுக்கு தண்ணீர் வசதி, மின் மோட்டார் சீரமைத்தல், வளாகம் முழுவதும் சுத்தம்படுத்தும் பணி, தண்ணீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், புல்வெளி மற்றும் பூங்கா பராமரிப்பு, நுழைவு வாயில் மற்றும் பெயர் பலகைகளை சீரமைத்தல் மற்றும் புதிதாக குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், வெளிப்புற மின் விளக்கு, மின் பெட்டிகள் மற்றும் மின் புதைவழி கேபிள் சீரமைத்தல், புதிய மின் கோபுர விளக்குகள், புதைவழி கேபிள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதை தொடர்ந்து நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு
சென்னை: சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதை தொடர்ந்து நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கனவே பல்துறை நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 23 வகை நாய்களும் மிகவும் ஆக்ரோஷமானவை என்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.
நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்வசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது.
வெப்பத்திலிருந்து விடுபட சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா சென்று வெப்பத்தை தணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து லேசான குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி, சேலம், திருவள்ளூர், கடலூர், திருப்பத்தூர், நாமக்கல், கோவை, ஈரோட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.