Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேண்டுவதை தருபவன் வேலாயுதன்

நல்லியக்கோடன் தமிழகத்தின் வேலூர், ஆமூர், மூதூர், எயிற்பட்டினம் மற்றும் இலங்கையிலுள்ள ஏறுமாநாடு நகரத்தையும் ஆண்டுவந்த அரசன், அன்பு, அறிவு, ஆற்றல், அறநெறியோடு மக்களைத் தன்னுயிர்போல் எண்ணி அரசுபுரிந்தான், எளியவன். கருணையும், வள்ளல் தன்மையும் கொண்டவன். இவனைப் பற்றி கடைச்சங்கப் புலவர், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் ‘‘சிறுபாணாற்றுப் படை’’ பாடல்கள் பாடி பரிசாக யானைக்கன்றும், வளநாடும், பொற்குவியலும் பெற்றார். முருகப் பெருமானை தன் குலதெய்வமாய் ஏற்றுக் கொண்டாடினான். சஷ்டிவிரதம் பூண்டான். முருகன் பெருமையைப் பேசுதலும், பாடுதலும் அவன் ஆட்சியில் பெருகின. முருகன் பேரில் தானம், தருமம், தவம், பூஜைகள் பல செய்தான்.

மக்கள், முருக பக்தியில் இன்பமாய் வாழ்ந்தனர். இவனின் புகழ், மூவேந்தர்கள் சேர, சோழ, பாண்டியனை எட்டியது. வேந்தருக்கு இல்லாத புகழ் ஒரு சிற்றரசனுக்கா என பொருமினர். அவன் நாட்டைப் பிடிக்க மூவரும் ஆமூரை நோக்கி படையெடுத்தனர். நல்லியக் கோடனும் வெற்றிவேல் முருகனை நினைந்து மூவேந்தரை எதிர்த்தான். இவனின் அமைச்சர் ஒருவன், பகைவர்களோடு சேர்ந்து உளவு சொன்னான். பகைவர் பக்கம் வெற்றி ஏற்பட்டது.

இனி வெற்றி இல்லை என உணர்ந்த நல்லியக் கோடன், இரவோடு இரவாக தன் மனைவியோடு வேலூர் சென்றான். கோட்டைக்குள் வந்தான். குளித்து, விபூதி தரித்து உருத்திராக்கம் அணிந்து, சடக்கர மந்திரத்தை உச்சரித்து ஆறுமுகப் பெருமானை ஆராதித்தான். ‘‘அய்யனே! எம்பெருமானே! கந்தா! கடம்பா! கதிர்வேலா! கார்த்திகை மைந்தா! வெற்றி வேலாயுதா! நின் திருவடியே துணை. மானம் இழந்து இனி வாழேன். காத்தருள்வாய்’’ என பக்தியோடு, மனம் உருகி, கண்ணீர் மல்கி வேண்டினான். கந்தனை நினைத்து விடிவதற்குமுன் சற்று கண்ணயர்ந்தான்.

வேண்டிய யார்க்கும் வேண்ட பொருள் தரும் தியாகன் அல்லவா முருகப் பெருமான். தன் பக்தனை கைவிட்டு விடுவானா? வேலும், வில்லும் ஏந்தி மயிலும், சேவலும் ெதாடர அவன் கனவில் தோன்றி, ‘‘அம்பா அஞ்சாதே! நீ குளிக்கும் கிணற்றிலுள்ள மலரை எடுத்து சடாக்கரம் மந்திரம் சொல்லி பகைவர்களை நோக்கி எறிவாயாக! எனக் கூறி மறைந்தார். மன்னன் விழித்து, பதைபதைத்து, காலங்காலமாய் தவம் செய்யும் மாதவர்க்கும் எட்டாத நின் திருவடி எனக்காக மயில் மீதுகூட வராமல் நடந்து வந்ததே, சிவந்ததே, என்னே நின் கருணை என வியந்து, எழுந்து, குளித்து கிணற்றிலுள்ள ஒரு மலரை கொய்து சடாக்கர (சரவணபவ) மந்திரம் சொல்லி வேலாயுதமாய் பாவித்து பகைவர் படையை நோக்கி வீசினான்.

அது விண்ணும், மண்ணும் சென்று பகைப்படையை அழித்தது. உளவு சொன்ன மந்திரியின் தலையை எடுத்து வந்து மன்னனிடம் சேர்த்தது. முருகனின் பெருமையை எண்ணி, எண்ணி வியந்து அவனுக்கு ஆலயம் எழுப்பினான் மன்னன்.தங்கள் படை அழிந்ததைக் கண்ட மூவேந்தர்கள், அவனிடம் நட்பு பூண்டு தத்தம் நாடு திரும்பினர். தன் அடியார்களைக் காக்க வேலவன் எப்போதும் ஆவலுடன் இருப்பான் என்பதை,

‘‘நாலாந்த வேதத்தின் பொருளோனே,

நானென்று மார்தட்டும் பெருமாளே’’ என்றும்

அடியார்களைச் தேடிச்சென்று அருள் புரிவதை,

‘‘மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர்சென்று

தேடி விளையாடியே அங்ஙனே நின்று

வாழு மயில் வீரனே’’

- என்கிறார் அருணகிரி நாதர்.

அடியார்கள் வேண்டும் வரமெல்லாம் தருபவர் வேலாயுதன் என்பதை,

‘‘வேண்டிய வரம் கொடுப்பான்

மெய்கண்ட தெய்வம் இத்தெய்வம் அல்லாமல்

புவியில் வேறில்லை’’

- என்று போற்றுகின்றார் குமரகுருபரர்.

நமக்குத் துன்பம் வரும்போதெல்லாம் எம்பிரானின் திருவடி, வேல், மயில், சேவல் ஆகியவற்றை மனதில் நினைந்து, உருகி வழிபட்டால் துன்பம் துடைப்பான். இகபர சௌபாக்யம் தருவான்.

நாகலட்சுமி