Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேலூரில் 107.6 டிகிரி வெயில் பதிவானது வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாமல் சுட்டெரிக்கிறது

வேலூர், ஜூன் 2: அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாத வெயில் தொடர்ந்து சுட்டெரிக்கிறது. வேலூரில் நேற்று 107.6 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இந்தாண்டும் கடந்த மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. கத்திரி வெயில் கடந்த 28ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்ததுடன், வெப்பநிலையும் குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் வட மாவட்டங்களான சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் மற்றும் வெப்ப நிலை குறையவில்லை. கோடை காலத்தில் வேலூர் மாவட்டத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த மே 1ம் தேதி இந்தாண்டின் அதிகபட்சமாக 110.7 டிகிரி கொளுத்தியது. அடுத்த நாட்களில் 108 டிகிரிக்கு மேல் தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கோடை மழையால் வெயில் அளவு படிப்படியாக குறைந்தது. 100 டிகிரிக்கு கீழ் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் வேலூரில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

சாலைகளில் கானல் நீராய் தெரிந்தது. வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார், இளநீர், நுங்கு விற்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில், நேற்று மாலை வேலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையில் நனைந்தபடியே வாகன ஓட்டிகள் சென்றனர். கொளுத்திய வெயிலால், அவதிப்பட்ட மக்களுக்கு, மழையால் அனலின் தாக்கம் சற்று குறைந்து ஆறுதல் அளித்தது.