கோவை, மே 1: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பிரதான சாலை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.
இதேபோல், மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் ஒரு மண்டலத்திற்கு 10 எண்ணிக்கையில், 50 நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 4வது வார்டு சரவணம்பட்டி வண்ணாங்குட்டை சாலை மற்றும் 10-வது வார்டு அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக போடப்பட்டுள்ள தார்ச்சாலையின் தரத்தை நேரில் ஆய்வு செய்தார்.
சாலையோரம் இருபுறங்களிலும் தேங்கியுள்ள மண்ணை அகற்றி, சாலையை நல்ல முறையில் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, 25-வது வார்டு காந்திமா நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் உந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர் முருகேசன், உதவி கமிஷனர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சக்திவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.