தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம், வரும் 25ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.