Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு 20 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

தவளக்குப்பம், மே 21: மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்2 மாணவி. இவர், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சிவராத்திரியன்று இரவு திடீரென மாயமானார். அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அந்த மாணவியை ஒருவர் இறக்கி விட்டது தெரிந்தது. இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த மாணவி, பழைய பாலத்தின் மேல் ஏறி, அங்கிருந்து கீழே தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரது பெற்றோர்கள் ஆற்றில் இறங்கி அவரை காப்பாற்றி மீட்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்த அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், புதுச்சேரியில் இருந்து மடுகரை வரை செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த கடலூர் மாவட்டம் புதுகடை கீழ்பாதி பகுதியை சேர்ந்த பாபு (29) என்பவர், மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பாபு ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்தவர். முதல் மனைவியுடன் விவாகரத்து ஆகி, 2வதாக திருமணம் செய்த பெண்ணும் பாபுவை பிரிந்து சென்று விட்டார். பாபுவு்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மேற்கண்ட மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சோபனாதேவி நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றவாளி பாபுவுக்கு போக்சோ(6) பிரிவின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், கடத்தல் பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.