Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மறைமலை நகரில் காட்சி பொருளான போக்குவரத்து சிக்னல்: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

செங்கல்பட்டு, ஜூலை 13: மறைமலைநகர் அருகே காட்சி பொருளாக உள்ள போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர். செங்கல்பட்டு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும்பாலானோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும்.

மேலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வாகன போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தை சீர் செய்யும் விதமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதிகளில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. அதன்படி, மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அதுபோன்ற, நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலையில் இடைவிடாமல் தொடர்ந்து அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், உடல்நிலை பாதித்தோர், முதியவர்கள் சாலையை கடக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அதிகாலை நேரங்களில் வாகனங்கள் வருவதை அறியாமல் சாலையை கடக்கும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். ஒருசில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, மறைமலை நகர் நகராட்சி அருகே காட்சிப் பொருளாக உள்ள சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வாகன போக்குவரத்தை சீர் செய்யவும், பொதுமக்கள் நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடந்து செல்லவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.