Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போலி பங்குச்சந்தையில் ஜிப்மர் ஊழியர் ஏமாந்த ரூ.18 லட்சம் மீட்பு

புதுச்சேரி, மே 29: போலி பங்குசந்தையில் ஜிப்மர் ஊழியர் ஏமாந்த ரூ.18 லட்சத்தை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக மீட்டனர். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் சஜித். இவர் கடந்த மார்ச் மாதம் இணைய வழியில் வந்த பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இதனைநம்பி சஜித், பல்வேறு தவணைகளில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்து பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்தார். உடனே, இச்சம்பவம் குறித்து சஜித் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சஜித் அனுப்பிய பணம், மர்ம நபரின் எந்த வங்கி கணக்குக்கு சென்றது என சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து அந்த கணக்கை முடக்கம் செய்தனர். தொடர்ந்து, சஜித் பணம் அனுப்பியதற்கான அனைத்து ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பின்னர், நீதிமன்றம் விசாரணைக்கு பிறகு, சஜித் இழந்த பணத்தில் ரூ.18 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அவருடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

சஜித்திடம் பணத்தை மோசடி செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், போலி பங்குச்சந்தை மோசடியில் சிக்கி இழந்த பணத்தில் ரூ.18 லட்சத்தை மீட்டுக் கொடுத்ததற்காக, சஜித் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேற்று முன்தினம் புதுச்சேரி சைபர் கிரைம் நிலையத்திற்கு வந்தனர். பின்னர், எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி, உதவி இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் காவலர் ஜெயக்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து சென்றனர்.