Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போக்குவரத்திற்கு இடையூறான கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

சாயல்குடி, மே 26: மீனங்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் இருந்து மீனங்குடி வழியாக கிழக்கு கடற்கரை சாலை சந்திப்புக்கு செல்ல பிரதான சாலை உள்ளது. இச்சாலையை கருங்குளம், பூதங்குடி, நரசிங்கக் கூட்டம், பாப்பாகுளம், மீனங்குடி, பள்ளனேந்தல், கண்டேன்கனி, சாத்தங்குடி, வெள்ளாங்குளம், என்.பாடுவனேந்தல், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலை வழித்தடத்தில் காலை, மதியம் இரவு என மூன்று வேளையில் அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. இதனை இப்பகுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி காலங்களில் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலாடியிலிருந்து பிரிந்து செல்லும் கருங்குளம் முதல் சாத்தங்குடி வரை உள்ள சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், இரு வாகனங்கள் எதிர் எதிரே வருவது தெரியாமல் மோதிக்கொண்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் பஸ் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது வாகனத்தில் சீமை மரக்கிளைகளிலுள்ள முள் உரசி பழுது ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோர கருவேல மரங்களை அகற்ற கடலாடி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.