Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவேற்காட்டில் கூவம் கரையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்: அனைத்து கட்சியினர் பங்கேற்பு

பூந்தமல்லி, மே 19: திருவேற்காட்டில் கூவம் கரையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு, கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாகவும் கூறி அதனை அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், வீடுகளை கணக்கெடுத்து நேற்று முன்தினம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்களில் கருப்பு துணியைக் கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து கட்சியினர் பங்கேற்று ஆதரவு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் உள்ளது. இதற்கு முன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதுகூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை. திருவேற்காட்டின் பூர்வகுடிகளான நாங்கள் பரம்பரை பரம்பரையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம். நாங்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் ஆதி திராவிடர்கள். இந்த ஊரின் பூர்வீக குடிமக்களான எங்களின் இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது, என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம். ஆனால் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசித்து வரும் நிலையில் இதுவரை எந்தவித வெள்ள பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எத்தனையோ பெரு வெள்ளம் வந்த போதும் எங்கள் குடியிருப்புகள் சேதமடையவில்லை. மேலும் இந்த இடங்களில் 26 நபர்களுக்கு கிராம நத்தமாக வகைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 160 பேருக்கு கிராம நத்தம் வகைப்பாடாக மாற்றம் செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்ததை நீதிபதிகள் பூந்தமல்லி வட்டாட்சியர் அவர்களை நேரில் சென்று விசாரணை செய்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டனர். ஆனால் பூந்தமல்லி வட்டாட்சியர் முறையாக விசாரணை செய்யாமல், எங்களின் எந்தவித ஆவணங்களையும் ஆய்வு செய்யாமல், தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்து குடியிருப்புகளை அகற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கக்கன் மூன்று கிணறுகள் திறந்து வைத்துள்ளார். 70 ஆண்டு பழமையான அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மிகவும் பூர்வீகமாக நீண்ட காலமாக குடியிருந்து வரும் எங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது. வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் குறிப்பிடும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை நாங்களே அகற்றித் தருகின்றோம் . பூர்வீக குடிமக்களான எங்களின் குடியிருப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது தெரியவில்லை. இந்த குடியிருப்புகளை அகற்றி அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள், என்று தெரியவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.