Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்போரூரில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் வசிக்காததால் பராமரிப்பில்லாமல் காணப்படும் காவலர் குடியிருப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்போரூர், ஜூன் 4: திருப்போரூரில் உள்ள காவலர் குடியிருப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் வசிக்காததால் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூரில் கடந்த 2014ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் 20 காவலர்களுக்கான வீடுகள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மட்டுமே குடியிருக்கின்றனர். திருப்போரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இங்கு வசிக்காமல் தனியாக வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். உயர் அதிகாரிகள் இல்லாததால் போலீஸ் குடியிருப்பு முழுவதும் கவனிக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளது.

இதன் காரணமாக, வளாகம் முழுவதும் பல்வேறு புதர்ச்செடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும், வளாகத்தில் நுழைவு வாயிலில் மதிற்சுவர் இல்லாததால், மாடுகள், பன்றிகள் நுழைந்து வளாகத்தை தங்களது ஓய்விடமாக மாற்றி வருகின்றன. மேலும், வளாகத்தில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மோட்டார் பல நேரங்களில் பழுதடைந்து விடுவதால் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குழாய் நீருக்காக போலீஸ் குடும்பத்தினர் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மொத்தம் 26 குடியிருப்புகள் இந்த வளாகத்தில் உள்ளன.

ஆனால், போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று போலீசாரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும், வளாகத்தில் குப்பைத்தொட்டி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. காவல் துறை நிர்வாகம் இந்த பராமரிப்பு சீர்கேடுகளை களைந்து வளாகம் முழுவதும் பூச்செடிகள் மற்றும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும், போலீசாரின் உடல் வலிவை பேணும் வகையில் மைதானத்தில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்து அமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

வாஸ்து பிரச்னை

திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் இந்த வளாகத்தில் குடியிருக்காமல் தனியார் குடியிருப்பில் வசிக்கின்றனர். அதிகாரிகளே வசதியைக் கருதி தனியார் குடியிருப்புக்கு சென்று விட்டதால் அரசு கட்டிடத்தையும், வளாகத்தையும் பராமரிக்க ஆள் இல்லாத நிலை உள்ளதாக அங்கு வசிக்கும் சக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். உயர் அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்காமல் தனியார் குடியிருப்பில் வசிப்பது சென்டிமெண்டா அல்லது வாஸ்து பிரச்னையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.