திடீர் மாரடைப்பால் டிரைவர் சாவு தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதியதில் முதியவர் பலி: 4 கார்கள், பைக்குகள் சேதம், அரும்பாக்கத்தில் பரபரப்பு
அண்ணாநகர், ஜூலை 14: அரும்பாக்கம் 100 அடி சாலையில், மாநகர பஸ்சை இயக்கிய டிரைவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்துசென்ற முதியவர் மீது மோதியதால் அவர் பரிதாபமாக இறந்தார். கிளாம்பாக்கத்தில் இருந்து தடம் எண்.70.சி என்ற மாநகர பேருந்து, நேற்று அதிகாலை கோயம்பேடு புறப்பட்டது. டிரைவர் வேலுமணி (58) என்பவர் பஸ்சை ஓட்டினார்.
காலை 6 மணி அளவில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்றபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து பஸ்சை ஓரம்கட்ட டிரைவர் முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. mஇதில், திருவல்லிக்கேணி லால் முகமது தெருவை சேர்ந்த சசிகுமார் (63) என்பவர் பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த மற்றொருவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள், பைக் சேதமடைந்தது. இந்த பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, டிரைவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதனை செய்தபோது வழியிலேயே இறந்துவிட்டார் என்பது தெரிந்தது. அவரது உடலை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


