Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முக்கிய ஆவணங்கள், தங்க பத்திரங்கள் சிக்கியது

கடலூர், ஏப். 27: சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள், தங்க பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், சுமூகமாக நடந்து கொள்ளவும், அங்கு செயல் அலுவலராக பணிபுரியும் சீனிவாசன் தரப்பில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் கடலூர் மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் சுபத்ரா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 24ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உள்ளாட்சி தணிக்கை செய்ய வந்தபோது அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைக்கும் விதமாக லஞ்சம் பெற இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவதானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசனின் வடலூரில் உள்ள வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் உள்ளாட்சி நிதி தணிக்கையின் உதவி இயக்குனர் பூங்குழலியின் கடலூர் ஆணைகுப்பத்தில் உள்ள வீட்டிலும், உள்ளாட்சி தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமியின் திருவந்திபுரத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகளும் நேற்று காலை 7 மணி முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர். வீட்டில் உள்ள அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். பிற்பகல் வரை நீடித்த இந்த சோதனையில் அதிக மதிப்புடைய சொத்து தொடர்பான ஏராளமான ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவிகள் மற்றும் தங்க பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தையும் எடுத்துச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த சோதனை கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.