Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோரிக்கை நிறைவேறாவிட்டால் விரைவில் ரயில் மறியல் போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 9: மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயிலில் அதிக அளவில் பயணிகள் செல்வதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று முதல் குறைந்த பெட்டிகளுடன் டெமு ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றியதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில் கடந்த வருடம் சேலம் வரை நீட்டிக்கப்பட்டது. காலை 6.20க்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. தொடர்ந்து மறுமார்க்கமாக சேலத்தில் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.

முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்வோர்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். சேலம் வரை நீட்டிக்கப்பட்டதில் இருந்து பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வந்ததால் 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து 16 பெட்டிகளாக இயக்க வேண்டும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் பல நாட்களாக கோரிக்கை விடுத்து ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் 12 பெட்டிகளுடன் இயங்கிய ரயிலை 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து இன்று முதல் மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய ரயில் மெமுவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பயணிகள் செல்லக்கூடிய சேலம் ரயிலில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே அமரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டு பயணிக்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்படாததால் பயணிகள் மயிலாடுதுறை - சேலம் செல்லக்கூடிய ரயிலை அடையாளம் காண்பதில் சிரமப்பட்டனர். எனவே பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் மயிலாடுதுறை - சேலம் ரயில் ஐசிஎப் வண்டியாக கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து இயக்க வேண்டுமென மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.