Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குளித்தலை பகுதியில் பலத்த காற்று 300 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம்

குளித்தலை, மே 30: குளித்தலை பகுதியில் பலத்த காற்றில் 300 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் நூறு ஏக்கர் வெற்றிலை கொடிக்காலும் காற்றில் ஒடிந்து விழுந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேரளா கர்நாடக மாநிலத்தில் பருவமழை பெய்து வருவதால் அதனுடைய தாக்கமாக தமிழகம் முழுவதும் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்று எந்த வருடமும் இல்லாத வகையில் இருந்து வருகிறது.

பொதுவாக ஆடி மாதம் தான் பலத்த காற்று வீசும். ஆனால் தற்பொழுது வைகாசி மாதத்திலேயே காற்று அதிக வேகத்தில் அடித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள் கூட தள்ளி விடும் அளவிற்கு காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று குளித்தலை சுற்றுவட்டார பகுதியான சிகம்பட்டி, கண்டியூர், ஐநூற்றுமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 300 ஏக்கருக்கு மேற்பட்ட மேலாக வாழை சாகுபடி விவசாயிகள் செய்து வந்துள்ளனர். தற்போது வாழை மரங்கள் நன்றாக வளர்ந்து குலை தள்ளியுள்ளது. குலை தள்ளிய வாழைத்தார்களை வெட்டும் நேரத்தில் கோடை கால சூறாவளிக்காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுக்கு குச்சியால் முட்டுக் கொடுத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் குளித்தலை பகுதியில் சூறாவளி காற்றினைப்போல் காற்றின் வேகம் அதிகமானதால் 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தது. மேலும் வீரவல்லி, சிங்கம்பட்டி, திம்மாச்சிபுரம், ஐநூற்றுமங்கலம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வெற்றிலை கொடிக்கால் காற்றின் வேகத்தை தாங்காமல் ஒடிந்து விழுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இதனால் வாழை விவசாயிகளும், வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.