Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை

குளச்சல்,ஏப்.11 : குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் கார்லூஸ்(63). கடந்த சில நாளாக கள்ளியடைப்பு பகுதியில் வசித்து வருகிறார். திருமணமாகவில்லை. நில புரோக்கர் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தை வீட்டில் ஒரு பேக்கில் வைத்திருந்தார். செலவுக்கு தேவையான பணத்தை அவ்வப்போது கொஞ்ச கொஞ்சமாக எடுத்து செலவழித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் செலவுக்கு பணம் எடுக்க பேக்கை திறந்தபோது ₹ 1.70 லட்சத்தை காணவில்லை. இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு காமிராவில் பழைய பொருட்கள் சேகரிக்கும் 4 மர்ம நபர்கள் வேகமாக திரும்பி பார்த்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மர்ம கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் துறைமுக பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். பள்ளி முக்கு சந்திப்பில் செல்லும்போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பியோட முயற்சித்தார். உடனே அவரை மடக்கிப் பிடித்தபோது வாலிபர் நில புரோக்கரின் வீட்டருகே உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான 4 பேரில் ஒருவர் என்பது அடையாளம் தெரிந்தது.

உடனே வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த ராமையா மகன் சின்னத்துரை(23) என்பதும், குளச்சல் புரோக்கர் கார்லூஸ் வீட்டில் பணம் திருடிய 4 பேரில் ஒருவர் என்பது தெரிய வந்தது. மற்ற 3 பேர் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசார் சின்னத்துரையை கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். பணத்துடன் தலைமறைவான மற்ற 3 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.