காஞ்சிபுரம், செப்.10: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்த 313 மனுக்கள் பெறப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 313 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், குன்றத்தூரை சேர்ந்த சஞ்சய்குமாருக்கு தொழில்நுட்ப கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.