Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண வழக்கு விசாரணை மே 6ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு கல்வீச்சு வழக்கில் 97 பேர் ஆஜர்

கள்ளக்குறிச்சி, ஏப். 25: கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண வழக்கு தொடர்பான விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார். இதனிடையே காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 97 பேர் ஆஜராகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி (17) பிளஸ் 2 படித்தார். கடந்த 2022ம் ஜூலை 13ம்தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் மதி உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் உயிரிழந்த மாணவி மதி தாயார் செல்வி, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் வழக்கிற்காக பள்ளி நிர்வாகத்தினர் மீது போடப்பட்ட வழக்கு எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ உரையாடல் பதிவுகள், மரண வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரை வழக்கில் சேர்க்க வேண்டும் ஆகியவற்றை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து அதற்கான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை மே 6ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைத்து நீதிபதி ராம் உத்தரவிட்டார். இதனிடையே பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 4 வழக்குகளில் 53 சிறார்கள் உள்பட மொத்தம் 916 பேர் மீது 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்தனர்.

இதில் காவல்துறை வாகனத்தை தீ வைத்து கொளுத்தியது மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2ல் நீதிபதி ரீனா முன்னிலையில் 97 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில் 23 பேர் பல்வேறு காரணங்களால் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை மே 7ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டார். வழக்குபதிவு செய்யப்பட்ட 124 நபர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் 3 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.