Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கருவேப்பிலங்குறிச்சி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம், ஜூன் 12: விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாத்துக்குறிச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் தடைபட்டது.

இதனால் குடிநீரின்றி அவதிப்பட்ட அப்பகுதி மக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று காலை 8 மணி அளவில் விருத்தாசலம்-முஷ்ணம் நெடுஞ்சாலையில் சின்னாத்துக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம்-முஷ்ணம் நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.