கோவை, நவ.12: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.13 கோடி மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை இன்று (12ம் தேதி) துவக்கிவைக்க உள்ளார். இதற்காக நேற்று கோவை வந்த அவர் கோவை மாநகராட்சி புலியகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இடையர்பாளையம், உக்கடம் புல்லுக்காடு ஆரம்ப சுகாதார நிலைங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று இரவு திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரம், மருந்து, மாத்திரைகள் இருப்பு விபரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.


